சிறுதானியங்களும், நன்மைகளும்.


சிறுதானியங்கள் குறித்துப் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சிலர், கேழ்வரகு, கம்பு, நாட்டுச்சோளம் ஆகியவற்றை மட்டுமே சிறுதானியங்கள் என நினைத்திருக்கலாம். 
வரகு, திணை, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு முதலான மற்ற சிறுதானிய வகைகளை அறிந்துகொள்ளுங்கள்...

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வகைகள் அனைத்தும் நமது தாத்தா பாட்டியினரின் இளம்பருவம் வரை, அவர்களின் முக்கிய உணவாக இருந்தது. பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டதும், மெதுமெதுவாக சிறுதானியங்கள் உற்பத்தி ஓரம் கட்டப்பட்டு, வெள்ளை அரிசி மற்றும் கோதுமைகளின் உற்பத்தி, இன்றைக்கு தவிர்க்க முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து விட்டது. இவ்வாறாக மக்கள், ஆரோக்கியம் தருகின்ற, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மற்றும் தமது வசிப்பிடத்திற்கு அருகிலேயே விளையக்கூடிய சிறுதானியங்களை முழுவதுமாக மறந்து விட்டனர்.

உங்கள் பகுதிகளில் விளையும் வகைகளை உண்பதே சிறந்தது.

சிறுதானியங்கள் என்றால் என்ன?

உணவு தானியங்களில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மானாவாரிப் பயிர்களாக, வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களிலும், மிகக் குறைவான தண்ணீரிலேயே வளரக்கூடியவை. மேலும் சிறுதானியங்கள், மிகவும் பழங்காலத்திலிருந்தே, மனிதர்கள் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்றாகவும், தானிய வகைகளில் முதன்மையானதாகவும் உள்ளது.

சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். நிலத்தில் விதையைத் தூவியதிலிருந்து, குறைந்தது 65 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும். இது அவற்றின் மற்றொரு தனிச்சிறப்பு. இத்தன்மை மக்கள் தொகை அதிகமுள்ள நிலப்பகுதிகளில் பயனளிக்கக் கூடியது. சிறுதானியங்களை, சரியான முறையில் சேமித்து வைக்கும் பொழுது, அவை இரண்டு அல்லது அதற்கு அதிகமான வருடங்களும் கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஏன் சிறுதானியங்களை உண்ண வேண்டும்?

ஊட்டச்சத்துக்கள்: இவை அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. குளுட்டன் தன்மை அற்றவை. அமிலத்தன்மை அற்றவை. இவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. இவற்றில், வெறும் கலோரிகளை மட்டும் அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை சத்து மட்டும் அல்லாது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. பட்டைதீட்டப்பட்ட அரிசியைப் போல் அல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் சீராக வெளியிடுவதால், சர்க்கரை நோய் உண்டாவதை குறைக்கிறது.



சிறுதானியங்களை யார் சாப்பிடலாம்?

சிறுதானியங்களை குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

சிறுதானியத்தை சமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?

சிறுதானியங்களை சாதமாக சமைக்கும் முன்னர், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நீரில் ஊற வைக்க வேண்டும். சாதம் நன்கு குழைவாக வேண்டும் எனில், குக்கரில் சமைக்கவும். உதிரியாக வேண்டுமெனில், பாத்திரத்தில் சமைக்கவும். வரகு, குதிரைவாலி, பனிவரகு, சாமை, திணை முதலிய தானியங்களை சமைக்க, அவற்றின் அளவைப் போன்று 2 1/4 முதல் 2 1/2 மடங்கு நீர் தேவைப்படும். குக்கரில் சமைக்க 8 நிமிடங்களும், பாத்திரம் எனில் 10 நிமிடங்களும் ஆகும்.

கம்பு மற்றும் சோளத்தில் சாதம் செய்ய, குறைந்த பட்சம் 15 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். சமைப்பதற்கு 3 முதல் 4 மடங்கு வரை தண்ணீர் தேவைப்படும். சாதம் குக்கரில் வேக 20 முதல் 25 நிமிடங்கள் ஆகும். பாத்திரம் எனில், 40 அல்லது 45 நிமிடங்கள் ஆகும்.

மற்ற உணவு வகைகளான, ரொட்டி, இடியாப்பம், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை, சிறுதானிய மாவில் தயாரிப்பதனால், சமைக்க அதிக நேரம் தேவைப்படாது.

திணை:
https://twinbuds.blogspot.com
திணை


உலகிலேயே அதிகம்  2வது தானியம் . பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. கண்பார்வைக்கு நல்லது. தாய்பால் சுரக்க உதவும். கபம் தொடர்பான நோய்க்கு நல்லது. வாயுத்தொல்லையை விரட்டும். இதில் தினை மாவு, முறுக்கு, அல்வா, புட்டு, பொங்கல், லட்டு, இட்லி, காரப்பணியாரம். பாயசம், அதிரசம் செய்யலாம்.

சாமை:
https://twinbuds.blogspot.com
சாமை

புஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது. இது மலச்சிக்கலைப் போக்க வல்லது. இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும். வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம். இட்லி, மிளகுப் பொங்கல் (வெண்பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி, புட்டு, கிச்சடி செய்து சாப்பிடலாம்.


குதிரைவாலி:
https://twinbuds.blogspot.com

சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி பயிர். உடலை சீராக வைக்க உதவுகிறது. புரதச்சத்தும் உயிர்ச்சத்தும்கூட அதிகமாக இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தவிர்க்க உதவும். செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்படும் தன்மை இதற்கு உண்டு. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது. ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது. இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது. குதிரை வாலியில் முறுக்கு, சோறு, தோசை,  உப்புமா, கிச்சடி உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

சோளம்:

நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. உடல் எடை அதிகரிக்க உதவும். ஆஸ்டியோபொரோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சோளத்தில் செய்த உணவுகள் சிறந்தவை. தோல் தொடர்பான நோய்கள், சொரியாசிஸ், தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சோளம் ஏற்றதல்ல. சர்க்கரைநோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்னை இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சிறந்தது. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது. சோறு, தோசை, அல்வா, வடை, பாயசம், அடை, பணியாரம் தயாரிக்கலாம்.

கம்பு:
அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது. வறண்ட பகுதியில்கூட விளையும்  தன்மை கம்புக்கு உண்டு. அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு.  கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம்.

வரகு:
வரகு

வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு.  சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.  

கேழ்வரகு:
உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்து அதிகம் உள்ளன. பாலில்  உள்ள கால்சியத்தை   விட  இதில் அதிகம் உள்ளன. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய்  எதிர்ப்பு சத்தியை  அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும்.

பனிவரகு: 
பனிவரகு ஒரு புன்செய் தானியம். சிறுதானியங்களில் குறைந்த காலத்தில் விளைவது இதுதான். குளிர் காலங்களில் அதிகாலையில் பொழியும் பனியின் ஈரப்பதமே இதற்குப் போதும். அதனால்தான் இதற்கு பனிவரகு என்ற பெயர். 
நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். எலும்பு, மூட்டுகளுக்கு நல்லது. பனிவரகில் இட்லி, தோசை, குழிப் பனியாரம் செய்து சாப்பிடலாம்.

    "நலமுடன் வாழ்வோம்; 
  தமிழ் போல் வளர்வோம்."





1 comment:

  1. Very useful for me. I think we start to eat this type of food. Good for our health also.

    ReplyDelete