பிரண்டைக்கு 'வஜ்ஜிரவல்லி' என்ற பெயரும் உண்டு. பிரண்டை என்னும் கொடி வகை தாவரம் பல வகைகளில் வளரக்கூடியதாகும். அதாவது சாதாரணப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, தட்டைப்பிரண்டை (சதுரப்பிரண்டை), முப்பிரண்டை, சிவப்பு பிரண்டை, தீம்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைகளில் வளரக்கூடியது. பிரண்டை பல வகைகளில் காணப்பட்டாலும், நான்கு பட்டைகளை உடைய சாதாரணப் பிரண்டையே பெரும்பாலும் கிடைக்கிறது.
பெரும்பாலும் பிரண்டையின் தண்டு பகுதி மற்றும் வேர் பகுதிகளே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வலைப்பதிவில் நாம் பிரண்டையைப் பயன்படுத்தி இட்லி பொடி எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
பிரண்டை இட்லி பொடி செய்ய தேவையானப் பொருட்கள்:
- பிரண்டை - 1 கட்டு
- கடலைப் பருப்பு - 1 கப்
- உளுந்துப் பருப்பு - 1 கப்
- மிளகாய் வற்றல் - 1 கப் (காரத்திற்கேற்ப)
- பூண்டு - 10 பல்கள்
- கறிவேப்பிலை - 1/2 கப்
- புளி - நெல்லிக்காய் அளவு
- பெருங்காயம் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய்
பிரண்டை இட்லி பொடி செய்முறை:
- பிரண்டையை தோல் நீக்கி; நார் அகற்றி; சுத்தம் செய்து; சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். (பிரண்டையின் சாறு அரிப்பையும், நமைச்சலையும் ஏற்படுத்தும் என்பதால், சுத்தம் செய்யும்முன் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும்).
- ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் சுத்தம் செய்த பிரண்டையை சேர்த்து வதக்கவும். பிரண்டை எண்ணெய்யை இழுக்காது. பிரண்டையை வதக்கியப்பின் அந்த எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை மூட்டு வலிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- அதே கடாயில், மேலே கொடுக்கப்பட்டுள்ள கடலைப் பருப்பு, உளுந்துப் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, புளி , பூண்டு ஆகியவற்றை மிதமான தீயில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
- சூடு ஆறிய பின் , பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஆரோக்கியமான பிரண்டை இட்லி பொடி தயார்.
மேலும் பிரண்டையின் மருத்துவ குணம் பற்றி தெரிந்துக்கொள்ள கீழே உள்ள Link-யை Click செய்யவும்.
"நலமுடன் வாழ்வோம்;
தமிழ் போல் வளர்வோம்."
No comments:
Post a Comment